#Book 24
"எண்ணங்களின் வண்ணங்கள்"
ஆசிரியர் கோ ஒளிவண்ணன்.
இது ஆசிரியருடைய நான்காம் புத்தகம். நாளிதழ்களிலும் பத்திரிகைகளிலும் வலைத்தளங்களிலும் பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட அவரது கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும்.
சில நூல்கள் அறிவுரை கூறும்,சில நூல்கள் கதை சொல்லும், சில நூல்கள் தூக்கம் தரும், வெகு சில நூல்கள் மட்டுமே அருகமர்ந்து உரையாடுவதை போல் ஒரு தோழமை தரும்.ஆசிரியரைப் போலவே எண்ணங்களின் வண்ணங்களும் மிகுந்த தோழமையோடு எளிய தமிழில் பலதரப்பட்ட செய்திகளையும் நிகழ்வுகளையும் நமக்கு எடுத்துரைக்கிறது.
அந்தந்த காலகட்டத்தில் நடந்தேறிய சமூக நிகழ்வுகளை தனது எழுத்தின் வழி எவருக்கும் புரியும் வண்ணம் எடுத்துரைப்பதின் மூலம் ஆசிரியருக்கு இருக்கும் சமூக பொறுப்பும் சமூக நலனில் அவர் காட்டும் அக்கறையும் பளிச்சிடுகிறது.
அசுரன், காலா, ஒத்த செருப்பு போன்ற திரைப்படங்களின் பூர்விகத்தையும், விமர்சனத்தையும் வாசித்தபோது, அத் திரைப்படங்களை இவரது கண்ணோட்டத்தில் மீண்டுமொருமுறை காணத் தோன்றுகிறது.
"வெக்கை" " மாதொருபாகன்" " பிறகு" போன்ற போற்றுதற்குரிய நூல்களின் விவரங்களை இன் நூல் வழியாக தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
பெரியாரின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஆங்காங்கே எடுத்துரைத்திருப்பதும்,திருக்குறளை பல இடங்களில் மேற்கோள் காட்டி இருப்பதும் தனிச்சிறப்பு.
இப்புத்தக வெளியீட்டு விழாவில் புத்தகத்தை குறித்து பேசிய கலைஞர் தொலைக்காட்சி நெறியாளர் திருமதி உமா அவர்களின் குரலை செவிகள் சேமித்துவிட்டது .அவர் இதில் இருந்து இரண்டு கட்டுரைகளை எடுத்து பேசினார் அசுரன் படத்தை குறித்த கட்டுரையும் ரெஜினா அத்தை எனும் கட்டுரையும் அவர் பேசிய விதமே என்னை இப்புத்தகத்தை வாங்கத் தூண்டியது.
33 கட்டுரைகளில் 33 தலைப்பை பற்றிய கட்டுரை என்பதல்லாமல் அதில் இடையே ஆசிரியர் கொண்ட தமிழ் பற்றும் அவருக்கு இருக்கும் உலகளாவிய அனுபவங்களும் ,அவர் சந்தித்த பல எழுத்தாளர்களையும் ,ஆளுமைகளையும் பற்றியும் தெரிந்துகொள்ள ஏதுவாய் இருக்கிறது.
அனுபவசாலிகளோடும் நல்லுள்ளம் படைத்த மனிதர்களோடும் உறவாடுவது எத்தனை இனிதோ அதுபோலவே எண்ணங்களின் வண்ணங்களும். ஆசிரியரைப் போலவே தோழமையோடு நல் வழிகாட்டியாகவும் இந்நூல் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஒளி சார் ...வாழ்த்துக்கள் தங்கள் எழுத்துப் பணி தொடரட்டும் தமிழன்பு வளரட்டும்.